Sunday, May 27, 2012

01) இதழ் - 010 (வைகாசி-2012)



அன்பு நண்பர்களே... முதலில் தங்கள் அன்பான வருகைக்கு நன்றிகள்!! இவ்விதழில் ஒவ்வொரு கவிதையின் கீழும் கவிஞரது பெயருடன், அவர்களது கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது!! எனவே கவிதைகள் பிடித்திருந்தால் அழைத்தோ, குறுஞ்செய்தி மூலமோ ஒரு வாழ்த்து கூறினால் "நந்தலாலா" மகிழும்! உங்களது பாராட்டு அவர்கள் தொடர்ந்து எழுத உற்சாகம் கொடுக்கும் என நம்புகின்றோம்...!! தொடர்ந்து வருக...!!!

முகப்பு : எவர்ஸ்டார்,சென்னை. 9380509195

02) ஆசிரியர் பேனா


காற்றின் அனுபவம் அருமையானது!
மரத்தின் தலைதடவி தாய்மை பூக்கும்;
மரத்தின் கல்லறையாம் காகிதங்களோடு
மடிப்புகள் விலக்கி காதல்புரியும்!
ஒவ்வொரு காகிதத்திலும் புதைந்து கிடக்கின்றன ,
பல கவிதைகள் மட்டுமல்ல; பல வனங்களும் தான்!

மரக்கிளையை வெட்டி ஆயுதம் செய்யலாம்;
வெறும் காகிதமும் செய்யலாம் என்றான் ஒருவன்!
படபடத்த காகிதம் 'தான் என்ன வெறுமையானவனா?'
என ஆதங்கப்பட்டது என்னிடம்!
அதன் ஆதங்கம் போக்க என்ன செய்வது...
இதோ:

அழகு வெள்ளைக் காகிதம்!
கவிதை எழுதி வைத்த போது
ஆகிப் போனது ஆயுதம்!



வாருங்கள்! நாமும் ஆயுதம் செய்வோம், காகிதத்தில்!!

-என்றும் நட்புடன்
வைகறை,
9688417714

03) யுத்தம்....த்தம்....தம்....ம்....


போர்த் தொடக்கம் பற்றி
பேசத் தொடங்கினேன்,
நீ
தேனீர் கலந்து தந்தாய்!
ஏவுகணை தாக்குதல் பற்றி
தொடங்கினேன்,
சலவை செய்த துணிகளை
மடிக்கத் துவங்கினாய்!
போராளிகளில் ஒருவன்
துரோகியானதைச் சொன்னேன்,
நீ
கேஸ் சிலிண்டர்
தீரப் போவதாய் சொன்னாய்!
இறுதி கட்டப் போரில்
எல்லாம் பாழ் என்றேன்,
அவித்த உருளைக்கிழங்குகளை
உறிக்கத் தந்தாய்,
நான் பேசவில்லை;
உறிக்கிறேன்!!
-ஜா.ப்ராங்க்ளின் குமார்,
மதுரை.
9843921471

04) அகத்திய தாகம்



<>
உள்ளங்கை உரசி
தெறித்த நெருப்பில்
கடுங்குளிர் கொளுத்தி தோற்றேன்,
இறுதியாய் என்
புருவங்களின் மத்தியில்
கனன்று கொண்டிருந்த - உன்
ஞாபகங்களால் கதகதத்தேன்!!


<>
என் நூறு களைப்புகள்
காணாமல் போகின்றன,
உன் ஒற்ரை
குளுக்கோஸ் முத்தத்தில்!


<>
வற்றிப் போயிருந்த
தலைக்காவேரியைக்
காண வந்த இடத்தில்
குடிக்க வைத்திருந்த
மினரல் தண்ணீரை
காக்கை ஒன்று
தட்டி விடவே
தாகத்தில் செத்தான் அகத்தியன்!!

-போ.மணிவண்ணன்,
கோவை.
9443751641

05) பூச்சியக் கணக்கு!



@


நான் பிராத்தனை செய்து
தொடர்கின்ற இடைவெளியில்
கடவுளிடன் தான்
பேசிக் கொண்டிருக்கிறது
குழந்தை,
நம்பரைக் கேட்கிறேன்
புரியவில்லை
அந்த பூச்சியக்கணக்கு!!


@


அதே பொய்யைத்தான்
தொடர்கிறாய்,
காரணங்கள் தேடும்
உன் மனதை
சமாதானப்படுத்திக்கொள்!
நான் கேட்டதும்
பொய்யாகத்தான்!


@


உன் முற்றுப்புள்ளியில்
ஆரம்பிக்கின்றேன்
அடுத்த அத்தியாயத்தை!
வலமிருந்து இடமாக வாசித்து
பொருள் காண்கிறேன்
உன் அகராதியில்!
இடக்கையால் கிறுக்குகிறேன்
செவ்வாயாகிறது என் மொழி!
கருப்பு மையால் அடிக்கோடிடுகிறேன்
உன்பெயரை
வெள்ளையாகின்றன என்பக்கங்கள்!!


@
-கார்த்திகா,
 நாகர்கோவில்.
 9655432586

06) காதல் மலர்கள்...


*
நான்
உனக்காய் எழுதிய
கவிதைகளை யெல்லாம்
புதைத்து வைத்தேன்
ஒரு வேப்பமரத்தினடியில்,
மறுநாள்
அதில் பூத்திருந்தது
ஒரு ரோஜா!
-M.பிரகாஷ்,
ஸ்ரீலட்சுமிபுரம்.
9994694425


*
நான்
மிதக்கத் தொடங்குகிறேன்,
புவிஈர்ப்புவிசையை
சமன் செய்துவிட்ட
அவள் புன்னகையால்!
-பொன்.ரவிச்சந்திரன்,
திருச்சி.
9965546368


*
உன் வெட்கத்தை
சேகரித்து வைக்கிறேன்,
நாளை எனக்கு
ஓவியப் போட்டி!
-ப.மணிவண்ணன்,
9524643246

*
பத்திரமாய் பார்த்துக்கொள்
யாரேனும்
மிதித்து விடப் போகிறார்கள்
நானென்று தெரியாமல்
உன் நிழலை!
-தாமரை தமிழ்நிலவு,
986564995

*
என் இதயமும் நீ,
சுவாசமும் நீ,
எனக்கென்று ஒரு
முகவரி எதற்கு
உன் கண்கள் இருக்கும் போது!
-தமிழ்ரேகன்,
9698176268

*
உன்
உதடுகள் 
அடிக்கடி 
உச்சரிக்கும் 
இரண்டெழுத்து 
கவிதை 
"ச்சீ!"
-சங்கீதா,
 snowwhitesona@gmail.com

07) தீமையின் மேல் தீ !!


ஒரு சிகரெட்
புகைப்பதற்கான
அல்லது
தொலைக் காட்சியில்
நடிகையின் நடனத்தைக்
கண்டு களித்திருக்கும்
நேரத்தில்
உங்களால் முடியும்
துளி கண்ணீரை,
ஒரு வெறுப்பை,
துரோகத்தின் மீதான
எதிர்ப்பை
உணர்த்திட,

கொத்துக் கொத்தாக
இனம் அழிக்கப்படும்
போதும் இன்னும்
நாம் இறையாண்மையைக்
காக்க வாய் மூடி
இருப்போமெனில்
வரலாற்றில் நாம்
துரோகிகள் எனத்தான்
பதியப் படுவோம்.

வில்லெடுத்து சமர் செய்ய
சந்தர்ப்பம் இல்லாத போதும்ஒரு
சொல்லெடுத்து வீசுவோம்
தீமையின் மேல்
தீயென.
-இரா.பூபாலன்
 9842275662 




காலணி
மிதிபடும் என்னை
விளக்கி வைக்காதீர்
ஏங்குகிறது, 
பிரிவினையை சற்றும் எதிபாராத
என் மனம், 
தேயும்வரை உன் பாதமலரில்
உயிர்வாழ ஆசை,
முத்தமிட்டு முத்தமிட்டு
மிதி படவே நானும்,
பூக்களாக!

-இரா.சுரேஷ்,
காட்டுக்கொல்லை
9585709357 

08) வருக கோடையே!


வாகன சக்கரத்தில் சிதையும்
தண்ணீர்ப்பழத்தை
தவத்தின் அருங்கனியாய்
மாற்றுகிறாய்;
மிதிவண்டியிலும்
இளநீர் காய்க்கிறது;
நிழலை அவர்களுக்கு
நிதர்சனமாய் காட்டுகிறாய்;
..செலவழித்த தண்ணீரை
சிக்கனமாக்கிக் காட்டுகிறாய்;
வீட்டிற்ககுள்  ஒடுங்கி
தொலைக்காட்சியில் தொலைந்தவர்களை
ஜன்னல் திறந்து
வெளிக்காட்சி பார்க்க வைக்கிறாய்;
வெட்கத்தை விட்டு அவர்களை
வாசலுக்கு வரவைக்கிறாய்;
வருக கோடையே! - நீதான்
மனித உயிர்களின் மாட்சி!!
-காயாதவன்,
9790341102

09) துளித்துளியாய்...

@
கிளையில் குருவி
தாலாட்டும் காற்று
ஏக்கத்தில் சிறுமி!
-கலைத்தாமரை,
மதுரை.
9688319313






@
ரயிலோசையை மிஞ்சும்
பசியோசை
பார்வையற்றோர் பாடல்!
-கார்த்திகேயன்,
9841617397






@
நான்
அம்மா
பக்கத்தில் நிலா!
-தாய்சுரேஷ்,
தருமபுரி.
9787164305






@
நாம் அண்ணன் தம்பிகள்
பக்கத்து நாட்டில் பிறந்ததால்
இன்று அகதிகள்!!
-பிரபாகரன்,
ஓமலூர்.
 9865145997








@
மூன்றாம் உலகப்போர்
முதுகில் ஆயுதப்பை
கான்வெண்ட் பிள்ளைகள்!
-ஞானவேல்,
இண்டூர்.
9943560679

10) வடுக்கள்...

நெஞ்சுப் பரப்பில்
சதைச் சிராய்ப்புகள்;
ஏறி இறங்கியதில்
தேய்ந்து போன மூட்டுகள்;
தவறி விழுந்ததில்
இறந்த உறவுகளின் உயிர்களென
பதநீரும், நுங்கும் விற்பவரிடம்
எப்போதும் கேட்பதில்லை நாம்!
மாறாக கொஞ்சமும் கூசாமல்
கேட்டு விடுகிறோம்
நுங்கு ஏன்
கடுக்காயாய் இருக்கிறதென்றும்,
பதநீர் ஏன்
இனிப்பாய் இல்லையென்றும்!


மறந்துவிடாதீர்கள்!
சீவித்தரும் போது கூட
நமக்காய் சிலதுளி
ரத்தம் சிந்துபவர்கள் அவைகள்!!
-விநாயகமூர்த்தி,
அந்தியூர்.
9715216794

11) அம்மா முத்தம்




ஒப்பனைகளைக் கடந்த
அழகான
உன் முகத்திலிருந்து
உதிரும் புன்னகை,
நிரம்பி வழிகிறது பாத்திரம்!


யாருமற்ற தனிமையில்
நீயும், நானும், மழையும்;
முற்றமெங்கும்
கொட்டிக் கிடக்கும்
தூறல் பேச்சுக்கள்!!


ஒன்றையும் ஒன்றையும்
கூட்டினாலும்,
உன்னையும் என்னையும்
கூட்டினாலும்
இரண்டென்கிறது கணிதம்;
கவிதை யென்கிறது
கணக்கேதுமற்ற என் மனம்!!


என்றைக்காவது
சரியாய் விழுந்து விடுகிறது
தேவையான சமயம் விழும்
தாயம் போல
இரண்டென்ற கணக்கு!
சிலேட்டு பலகை மனம்
நிறைந்து வழிகிறது
நூறு மதிப்பெண்களால்!


அன்றைக்கு கிடைக்கும்
அம்மா முத்தம் போலொரு
முத்தம் வேண்டும்,
தருவாயா?

-எழில்மொழி,
சேலம்.
9442647487

12) பகிரங்க ரகசியம்




பால்யத்தில்
ஆடி உடைத்த
கோலிகளின் ஞாபகம்
இருக்கிறது உடையாமல்!


ரெட்டை ஜடை பிடிக்குமென
ஒற்றை ஜடையை நோக்கி
சொன்னதில்
பல் விழுந்த சிரிப்பு
நசுங்காமல் இன்னும்!


ஜவ்வு மிட்டாய்க் காரனிடம்
எனக்கு கடிகாரத்தை
கையில் கட்ட அடம் பிடித்த
அந்த விருப்பமும்,


என் அம்மாவுக்குத் தெரியாமல்
தங்கையின் வளையல்களை
அணிந்த போது
எழுந்த ஒலிகளும்,


இன்னும் நெஞ்சக்கூட்டில்
இருக்கிறது ரகசியமாய்..
என் மனைவிக்கும் தெரியாமல்!!

-கா.அமீர்ஜான்,
திருநின்றயூர்.
9840954846

13) துளித்துளியாய்...



@
வெட்டினான் மரத்தை
அழுதது
கோடாரி காம்பு!
-செண்பக ஜெகதீசன்,
9443980220


@
நிரம்பி வழியும்
நகரப் பேருந்தில் நிற்கிறாள்
நிறைமாத கர்ப்பிணி!
-கரு ரவிச்சந்திரன்,
திருச்சி.
9994369139


@
அரசு சட்டம்
அமுலானது விண்ணிலும்
மாதம் ஒருநாள் மின்வெட்டு!
-பெ.குமார்,
உசிலை
9944378477


@
ஊமைப் பாடகனின்
இசைப் பேச்சாய்
ஒலிக்கும் புல்லாங்குழல்!
-சு.கேசவன்,
தொண்டையூர்
9943874595


@
என் பக்கத்து வீட்டில்
இறந்து விட்டார்கள்
யாரோ..?
-விஜயராஜ்,
ஊட்டி.
9787853434

14) முடிவிலா சாலை!


>
என் நதி குடித்து
பருத்துக் கொண்டிருக்கும்
மீனுக்குத் தெரியுமா
என் மணற்பரப்பில்
அது காயப்போவது!!


>
என் விளக்கு ஒளிர்கிறதாம்;
பிரகாசிக்கிறதாம்;
ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறதாம்;
அசைந்து நீளும் அதன் சுடர்
உன் விளக்கிலிருந்து
பற்ற வைத்தது!


>
எல்லாம்
முடிந்து விடவில்லை,
மிச்சமிருக்கிறது
கடைசி ரத்தம்!
தயாராகவும் இரு
சமுத்திரத்தில் மூழ்க!


>
நீண்டு கிடந்த
அந்த ஊரின் சாலை
முடிவுக்கு வருகிறது,
பார்வையற்றவனின்
தொடர் கோல்தட்டலில்!!


-யாழி,
கோவை.
9976350636

15) வாழ்க்கைச் சுவடுகள்














கற்றுக் கொடுங்கள்
பூக்களே...
மனிதருக்கும் புன்னகையை!!



கூட்டத்தில்
மனிதநேயம் காப்போம்
என்றுவிட்டு
வீட்டில்
மாட்டிறைச்சிக்கறி விருந்து...

காத்திருக்கிறேன்!!
எனக்கும்
காதல் வருமென்றல்ல..
காணாமல் போன
கணவர் வருவாரென்று...

கட்டாயப்படுத்தி
கையளிக்கப் படுகின்றன
விதவை எனக்கு
வித விதமான பட்டங்கள்..

தேடிக் களைத்துவிட்டேன்
தேநீர் ஊற்றிய அம்மாவை....
கை மட்டும் இருக்கிறது
ஏனையவை......?

நீதிமன்றங்கள் நிறைகின்றன
விவாகரத்துக்கள்
வீதிவரை நிற்பதால்...

அக்கா
அரைப் பவுன் செயினாம்
அண்ணா
அவசரமாய் பைக்காம்
அம்மா மட்டும்
அன்பு மட்டும் போதுமாம்!!

நானும் வசதியானவன்
கண்ணீரும்
கனவுகளும்
என்னிடம் ஏராளமுள்ளன...



-இராமசாமி ரமேஷ்,
 அளம்பில்
 alampilamal@yahoo.com

16) செருப்பில் சேர்ந்த மலர்கள்


சில நேரங்களில்
வரிசைகள்
வெறுப்புத் தீயில்
வேக வைக்கின்றன!

தொட்டில் கயிற்றில்
தூங்கிய குழந்தையின்
வழிந்த பாலை
துடைத்து விட்டு
தொட்டுத்தூக்க மனமின்றி
விட்டுவிட்டு காத்திருக்கும்
தாய்மார்கள்
தான் நின்ற
வரிசைகள்
தேங்கிவிடும் போது
தவிப்புகளில் கால்கள்
தண்டவாளம் தாண்டிய
ரயில்கள் போல புரள்கின்றன!


அதிகாலையிலே
இடம் பிடித்தும் கூட
சரியான சில்லறை இல்லாமல்
பின் வரிசைக்கு
சிபாரிசு செய்யப்படும் போது
சிலரின் இதயத் துடிப்பு
தட்டச்சு போல
அதிகாரிக்கு சொல்ல வேண்டிய
பதிலை
அச்சடிக்க தொடங்குகிறது!
  
ஓய்வூதிய
அப்பாக்களும்
மாமனார்களும்
நிற்கமுடியாமல்
காத்திருக்க
ஈரக்காயத்தில்
ஈட்டி பாய்ச்சுவது போல
உதாசீனப் படுத்தும் தருணம்
சில இதயங்கள்
உலக வாழ்வையே
வெறுக்கத் துணிகின்றன

நீண்டு கொண்டே
போகும் எந்த
வரிசைகளிலும்
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை
செருப்புகளில் அறைபடுகின்ற
மனித நேயத்தை!


-வே. பத்மாவதி,
9843189353 
padmavathy.ramani@gmail.com

17) ஆயுத எழுத்து...




#
கிளை, இலை, காய்கனியென
மரம் எழுதிய
ஆயிரம் கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தது
மனிதனின்
கோடாரி எழுதிய ஆயுதயெழுத்து!
-AM.முபாரக்,
9952561499


#
வேலிமுள்
கிழித்த காயம்
உள்ளாறும்,
ஆறாதே
முள்வேலி கிழித்த வடு!
-ஸ்ரீதர் பாரதி,
9789454330
மதுரை.


#
அணையிலிருந்து
திறந்து விடப்பட்ட
புதிய நீர்
மணல் எடுக்கப்பட்ட
பள்ளங்களில் கொஞ்சநேரம்
நின்று போனது
துக்கம் விசாரிப்பதாய்!
-உதயகுமாரன்,
வீரன்வயல்.
9962861494


#
பார்த்த முகங்களிலெல்லாம்
தெரிகிறது
காந்தியின் சாயல்,
நெருங்க நெருங்க
ஒப்பனை கலைந்து
உள்ளிருந்து உதிர்கின்றன
கூர்தீட்டப்பட்ட ஆயுதங்கள்!
-தஞ்சை.கமாருதீன்,
9940781914


#
அன்றொரு நாள்
நதியில் குளித்து விளையாடியவன்,
இன்று தன்
மகனோடு வருகிறான்
மணற்பெருவெளியை
வேடிக்கை பார்த்தபடி!
-வண்ணை சிவா,
9941756203

18) ஏக்கப் பார்வை!


*
சாலையோரத்தில்
ஒற்றைக் கம்பத்தில்
வேடிக்கை காட்டும்
கழைக்கூத்தாடியின் குழந்தை
ஏக்கமாய் பார்க்கிறது
முதல்முறை தொங்கும் போதே
காசு போட்டுவிடுங்கள் என!


*


உடைந்து போன
ஓடைகளை எண்ணி
ஊர்ந்து போகிறது,
குளம் நிரம்ப
கண்ணீர்விடும்
நத்தையின் மனம்!


*


நிலாவில் தண்ணீர்
துடைத்துச் செல்கிறது
தேவதையின் கைக்குட்டை!


*


காத்துக் கொண்டிருக்கின்றன
கொக்குகள்,
தூண்டிலில் வேதனையுடன்
மண்புழுக்கள்!!


*
- செல்வின் ராகமுதன்,
9943428126

19) ஹைக்கூவில் பறந்த குருவி!



^
அத்தனைப் பசி
கிடைத்த என் உணவில்
அழகாய் ஒரு எறும்பு!!


^
அவர்கள் வரவில்லை
வீட்டில் இருக்கிறது
இன்னும் அமைதி!


^
ஜன்னற் கதவை
சாத்த விடுவதில்லை
பெரிய சிலந்திவலை!


^
சுவர் விளிம்பில்
தத்திய குருவி
பறந்து விட்டது!


^
ஜன்னற்குருவியை
விரட்டியடிக்கும்
தாத்தாவின் செறுமல்!!

-நாணற்காடன்,
ராசிபுரம்.
9942714307

20) காதல் மலர்கள்...


*
எங்கு தேடியும்
கிடைக்க வில்லை,
உன்னை வரைய எனக்கொரு
வண்ணத் தூரிகை!
-வாணிகோகிலா,
கோவை.
9750378384

*
கவனிலிருந்து
விடுபடும் கற்களாய்
கோப வார்த்தைகளை
கொட்டுகிறாய் என் மேல்,
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்
அவைகளை
சாக்லேட் துளிகளாக!
-அருணாச்சல சிவா,
8124177898


*
பழுக்க காய்ச்சிய கம்பியாய்
நீ திட்டிய வார்த்தைகளால்
என்மனம்
ஒரு நீர்ச்சொல்லுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறது,
உன் மென்புன்னகையின்
குளிர் காற்றில்
ஆறிவிடும் - என்
இரும்பு மனதில் ரணங்களும்!
-மாரிச்சாமி,
தருமத்தூரணி.
9489300096

*
"எல்லாம் கொடு" என
எல்லோரும் கேட்கும்
கருப்பசாமியிடம்
என்னை மட்டும் கேட்டவள் நீ!
-கல் கார்த்திக்,
9751574354


*
மூன்றுஎழுத்து கவிதை ஒன்றை சொல்லேன்
காதலி என்றேன்.
'அம்மா ' என்று சொல்லக்கூடாதா
அம்மா வருத்தப்பட்டாள்.
அம்மா நீ
'அன்பு' என்ற மூன்றெழுத்தின் உண்மையென்றேன்.
காதலியோ
'பொய்' என்ற இரண்டெழுத்தின் நிஜமென்றேன்.
அடப்பாவி என்று ஆச்சரியமுற்றாள்.
கவிதைக்கு 'பொய்'அழகுத்தானே.

ஆரோ சங்கர்,
9500002592

21) நன்றியுடன்...



வாசகராக,
படைப்பாளராக,
விமர்சகராக,
நலம் விரும்பியாக,
சோர்வில் தூண்டுகோலாக,
    இப்படி பற்பல வண்ணங்களுடன் நந்தலாலாவுடன் பயணிக்கும் நீங்கள்தான் பயணிக்க வைக்கின்றீகள் நந்தலாலாவை!! உங்கள் பாதச்சுவடுகளில் நிகழும் நந்தலாலாவின் பயணம் தொடர உடன்வாருங்கள்; நந்தலாலாவும் உங்கள் உடன்வரும் தொடர்ந்து!!

-நம்பிக்கையுடன்
வைகறை,
9688417714